முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பாகிஸ்தானில் மனிதமிருகங்கள் நடத்திய கோர தாக்குதல் -முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம் !!

பெஷாவர்,

தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூர மான மிருகவெறி தாக்குதலை நடத்தி, அப்பாவி குழந்தைகளை கொன்று குவித்தது, உலகையே உலுக்கி உள்ளது.

இதுபற்றிய தகவல்கள் ரத்தத்தை உறைய வைப்பதாக அமைந்துள்ளன.

தற்கொலைப்படை தீவிரவாதிகள்

பெஷாவர் நகரில், வார்சாக் ரோட்டில் ராணுவ பப்ளிக் பள்ளிக்கூடம் உள்ளது. அதன் அருகில் ஒரு மயானமும் உள்ளது. அந்த மயானத்தின் வழியாக, ராணுவ சீருடை அணிந்த, அரபி மொழி பேசிய 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள், ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் புகுந்தனர். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.30 மணிக்கு புகுந்த அவர்கள், மறுநிமிடமே இலக்கின்றி, ஈவிரக்கமின்றி அப்பாவி மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார்கள்.

ஒவ்வொரு வகுப்புக்கும் அவர்கள் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். தொடர் துப்பாக்கிச்சூடு காரணமாக அந்த பகுதியே அதிர்ந்தது. எங்கும் குண்டு வெடிப்பும், மரண ஓலமும், கூச்சலும் கேட்டது.

தேர்வு எழுதிய மாணவர்கள்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில், பள்ளிக்கூடத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தனர். பள்ளிக் கூடத்தில் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் உஷார் ஆனார்கள். மாணவர்களை, தேர்வு எழுதுவதை நிறுத்தி விட்டு, வகுப்பறையில் தரையில் படுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். பல மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக வெளியேறினார்கள்.

134 பேர் கொன்று குவிப்பு

தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று சம்பவ பகுதியை சுற்றி வளைத்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருப்பினும், இந்த கொடூர தாக்குதல்களில் 84 குழந்தைகள் உள்பட 104 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் 134 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வானொலி அறிவித்தது. இவர்களில் 132 பேர் குழந்தைகள், ஒருவர் ஆசிரியை, மற்றொருவர் பள்ளிக்கூட காவலாளி. குழந்தைகளைப் பறிகொடுத்தோரின் கதறல், கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக அமைந்தது.

பலி உயரும்?

245 பேர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனாலும், பலரது நிலைமை கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

6 தீவிரவாதிகளும் பலி

தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார்.

மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 140 ஆகும்.

ஜனாதிபதி, பிரதமர் கண்டனம்

உலக நாடுகளில், சமீப காலத்தில் நடந்த தாக்குதல்களில் அதிபயங்கரமான தாக்குதல் இதுதான் என்றும், குழந்தைகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இதுதான் என்றும் கருதப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசேன் கடும் கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கண்டனம் தெரிவித்ததுடன், நிலைமையை நேரில் ஆராய்வதற்காக பெஷாவர் விரைந்தார். இதே போன்று ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப்பும் அங்கு விரைந்தார். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

தலீபான்கள் பொறுப்பேற்பு

இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தலீபான்கள் உடனடியாக பொறுப்பேற்றனர்.

இதுபற்றி அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தற்கொலைப்படையினர் 6 பேர் இந்த தாக்குதல்களை நடத்தினர். வடக்கு வாஜிரிஸ்தானில் போராளிகளுக்கு எதிராக ராணுவம் எடுக்கிற நடவடிக்கைக்கு பழிக்கு பழிவாங்கத்தான் (ராணுவ பள்ளிக்கூடத்தை குறி வைத்து) இந்த தாக்குதல்கள். எங்கள் வலியை, வேதனையை அவர்கள் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என கூறினார்.

நேரில் பார்த்தவர்கள் பேட்டி

பள்ளிக்கூடத்தின் அருகில் வசிக்கும் ஷாகுப்தா என்ற மாணவி, “பள்ளிக்கூடத்தில் 2 குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. முதல் குண்டுவெடிப்பை விட இரண்டாவது குண்டு வெடிப்பு சத்தம் பலமாக இருந்தது” என்று கூறினார். சுஜா என்ற மாணவர், “நாங்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோதுதான் துப்பாக்கியால் சரமாரியாக சுடுகிற சத்தம் கேட்டது. உடனே ஆசிரியர் எங்களை தேர்வு எழுதுவதை விட்டு விட்டு தரையில் படுத்துக்கொள்ளுமாறு கூறினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்படி தரையில் படுத்திருந்தோம். பின்னர் ராணுவ அதிகாரி வந்து கூறிய பின்னர்தான் எழுந்து வெளியேறினோம்” என்றார்.

மற்றொரு மாணவர், தீவிரவாதிகள் அதிநவீன துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டதாக கூறினார். இன்னொரு மாணவர், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நீளமான தாடி வைத்திருந்தனர், சல்வார் கமீஸ் அணிந்திருந்தனர் என கூறினார்.

மனித கேடயங்கள்

முதலில், ராணுவத்தின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கத்தில் மாணவர்களை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து, மனித கேடயங்களாக பயன்படுத்தினர்.

சம்பவத்தின்போது பள்ளிக்கூடத்தின் பின்புற வாயில் வழியாக தப்பிய மாணவர்களில் ஒருவர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, “முதலில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு ராணுவ அதிகாரி எங்களை பின்புற வாயில் வழியாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் வெளியேறி விட்டோம்” என்று கூறினார்.

3 நாள் துக்கம்

தீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார். பெஷாவரில் நிருபர்களிடம் பேசிய அவர், “இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில், தீவிரவாதத்துக்கு எதி

ரான போர் ஓயாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என கூறினார்.

இந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் உலகத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

பழிக்கு பழி

பாகிஸ்தானில் பெஷாவரையொட்டியுள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான், அல்கொய்தா தீவிரவாதிகளின் சொர்க்க புரியாக திகழ்கிறது. இங்குள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் கூட்டாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களும், பாகிஸ்தானின் போர் விமானங்களும் கடந்த 6 மாதங்களாக நடத்தி வருகிற வான்தாக்குதல்களில் தீவிரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு பழிக்கு பழிவாங்கும் விதத்தில்தான் தலீபான் தீவிரவாதிகள் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூட தாக்குதல்களை நடத்தி, உலகையே நடுங்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)